| 7 comments ]

ஒரு புகழ்பெற்ற கல்வி நிறுவனம் பத்தாண்டுகளுக்கு மேலாக எம்.சி.ஏ என்னும் முதுகலை கணிப்பான் பயன்பாட்டியல் பாடவகுப்பை மாணவர்களிடம் பெருந்தொகையை நன்கொடையாகப் பெற்று நடத்தியது.அக்கல்லூரிக்கு ஒரு மின்னஞ்சல் வசதிகூட அந்த நாளில் இல்லை என்பதை இப்பொழுது நினைத்து நான் வருந்துவதுண்டு. மின்னஞ்சல், இணையம் பற்றி நேரடியாக அறியாமல் அந்த மாணவர்கள் என்ன அறிவைப் பெற்றிருப்பார்கள்?.கரும்பலகையில் கற்பதுஅல்ல இணையம் சார்ந்த கல்வி.அதனை முழுமையாக செய்முறை வழி கற்றால் பயன்பாடு மிகுதியாயிருக்கும்.அந்தக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் எத்தகைய செய்முறை அறிவுப் பின்புலமும் இல்லாமல் வெளியேறி இருப்பார்கள் எனபதுதான் உண்மையாக இருக்கமுடியும்.


கணிப்பொறி,இணையம் இவை இன்று உலகில் தவிர்க்கமுடியாத கல்விப் புலங்களாகிவிட்டன.ஒருநாள் உலகில் இணையசேவை முற்றாகத் தடைப்பட்டால் உலக இயக்கமே நின்றுவிடும் என்ற அளவிற்கு இணையம் முதன்மை உடையதாகிவிட்டது. வானவூர்திப் பதிவு, தொடர்வண்டிப் பதிவு,பங்குச்சந்தை,வங்கிப் பணப்பரிமாற்றம்,நிறுவனங்களின் செயல்பாடுகள் யாவும் இணையத்தை நம்பியே இயங்குகின்றன.இவ்விணையத்தில் பலதுறையில் தொழில் நுட்பம் அறிந்தவர்கள் பணிபுரிகின்றனர்.எனக்கு வேண்டியவர்கள் பலர் கணிப்பொறித் துறையை நன்கு கற்று, அத்துறையில் வியத்தகு சாதனைகள் புரிந்துள்ளனர். சிலர் அடிப்படைக்கல்வி கூடப் பெறாமல் தாமே,கணிப்பொறி,இணையம் சார்ந்த அறிவுபெற்று மிகச்சிறந்த இணையப் பக்க வடிவமைப்பாளராகவும், மென்பொருள் உருவாக்குநர்களாகவும் உள்ளனர்.அவர்கள் செய்த பணிகள் தமிழ் மொழிக்கும்,தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்ப்பதாக இருக்கின்றன. அத்தகு இளைஞர்களை அடையாளம் காட்டுவதால் கணிப்பொறி,இணையத்துறையில் உள்ள பலர் தமிழ் வளர்ச்சிக்கு உதவுவார்கள் என்ற அடிப்படையில் சிலரை அடையாளம் காட்ட நினைக்கிறேன்.

திண்டிவனத்திற்கு அருகில் உள்ள சிற்றூர் தாதாபுரம்.வேளாண்மைத் தொழிலில் ஈடுப்பட்டிருந்த பெற்றோர் தம் மகன் வெங்கடேசுவைப் படிக்கவைக்க நினைத்தும் பொருள் வசதி இல்லாததால் திண்டிவனத்தில் மேல்நிலைக் கல்வி வரை படிக்கவைத்து,அதன்பிறகு தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவரிடம் கணக்குகளைக் குறித்துவைக்கும் பணியாளனாகப் பணிக்கு அனுப்பிவைத்தனர்.பேருந்து உரிமையாளர் தம் கடைக்கு வந்த பணியாளனை இடைப்பட்ட நேரங்களில் கணிப்பொறிப் படிக்கும்படி பணம்கொடுத்து ஊக்கப்படுத்த, வெங்கடேசன் என்ற அந்த மாணவத் தொழிலாளிக்குக் கணிப்பொறி அறிமுகமானது.சிறிதளவு கணிப்பொறி கற்ற வெங்கடேசு சென்னை சென்றால்தான் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்ற நிலையில் சென்னைக்குப் பணிக்குச் சென்றார்.அச்சகம் ஒன்றில் பணி கிடைத்தது.இடைப்பட்ட நேரங்களில் பகுதிநேரமாகச் சில இதழ்களின் வடிவமைப்பாளர் பணியை மேற்கொண்டார்.நெற்றிகண்,சட்டப்பிரச்சனை உள்ளிட்ட இதழ்களை வடிவமைக்கவும் இணையத்தில் இவ்விதழ்களைத் தெரியச் செய்யவும் முயன்றார்.

வருவாய் குறைவு. பணி அதிகம்.பி.பி.ஏ.அஞ்சல்வழிப் படிப்பு தடைப்பட்டது.தன் ஊருக்கு அருகில் உள்ள புதுச்சேரியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிகிடைத்து 2000 ஆம் ஆண்டில் இணைகின்றார்.5 ஆண்டுகளில் கடுமையான உழைப்பு,முயற்சியால் தாம் பணிபுரிந்த நிறுவனத்தில் நம்பிக்கைக்குரியவரானார்.சராசரி பணியாளராக இல்லாமல் ஒரு நிறுவனத்தை உருவாக்கவும்,மேலாண்மை செய்யவுமான திறம் பெற்ற வெங்கடேசு தாமே ஒரு நிறுவனத்தை உருவாக்குகிறார்.பலருக்கு வேலை வாய்ப்பு வழங்கும்படியாகவும்,பலர் இவர் செய்துதரும் வேலைக்குக் காத்திருக்கவுமான நிலையை உருவாக்குகிறார்.மூன்றாண்டுகளில் இவருடைய நிறுவனத்தின் சேவையைப் பெற்ற நிறுவனத்தால் இவர் நிறுவனம் வாங்கப்படும் நிலைக்கு இவர் நிறுவனப்பணி இருந்தது.

இணையம் வழியாக உலகின் பல பாகங்களில் இருக்கும் நிறுவனங்களுக்கு மொழிபெயர்ப்புப் பணிகளைச் செய்து தருவதே இவர் நிறுவனப் பணியாகும். உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப,உரிய காலத்தில் இவர் பணிசெய்து கொடுத்ததால் இவர் நிறுவனம் உலக அளவில் நம்பிக்கைக்குரியதாக மாறியது.315 மொழிகளில் மொழிபெயர்க்கும் சேவையை இவரின் நிறுவனம் மேற்கொண்டிருந்தது.உலகின் புகழ்பெற்ற மருந்து நிறுவனங்கள்,மகிழ்வுந்து நிறுவனங்கள் இவர் மொழிபெய்ப்புப்பணிக்குக் காத்திருந்தன(இணையம் வழி மொழிபெயர்ப்புப் பற்றிய பல தகவல்கள் வெங்கடேசுவிடம் உள்ளன).உலகத்தரத்திற்கு இவரின் நிறுவன மொழிபெயர்ப்புப் பணி இருந்தது.இணையத்தின் உதவியால் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வெங்கடேசுவிற்குத் தமிழுக்குப் பணி செய்யும் விருப்பம் ஏற்பட்டது.

ஒவ்வொருவரும் தங்கள் விருப்பங்களைக் கணிப்பொறியில் வலைப்பதிவுகளாக வெளியிட்டு வருகின்றனர்.இவ் வலைப்பதிவுகளைத் திரட்ட,திரட்டி ஓரிடத்தில்காட்ட உலக அளவில் ஒவ்வொரு மொழியிலும் திரட்டிகள் உள்ளன.ஆங்கிலத்தில் Technorati.com , Bloglines.com உள்ளிட்ட திரட்டிகள் உலகம் முழுவதும் உள்ள பதிவர்கள் எழுதும் செய்திகளைத் திரட்டும் பணியில் உள்ளன.தமிழில் இப்பணியைத் தமிழ்மணம்,தேன்கூடு,தமிழ்வெளி உள்ளிட்ட திரட்டிகள் செய்கின்றன. இத்திரட்டிகளின் பணியை உற்று நோக்கிய வெங்கடேசு தாமும் ஒரு திரட்டியை இவற்றைவிட மேம்பட்ட கூடுதல் வசதிகளுடன் உருவாக்க நினைத்தார்.புதுச்சேரியில் தொடங்கப்பட்ட புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கம் பல நண்பர்களை வெங்கடேசுவிற்குத் தந்தது. புதுச்சேரியில் எழுதும் வலைப்பதிவுகளை மட்டும் தொகுக்கும்படியாகத் "திரட்டியை" உருவாக்கினார்.உலகம் முழுவதிலிருந்தும் பலர் இவர் திரட்டியில் தங்கள் பதிவுகளை இணைத்தனர்.ஏறத்தாழ மூன்று மாதங்களில் இரண்டாயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் பதிவுகளை இணைக்க விண்ணப்பித்தனர்.இவர்கள் எழுதும் எழுத்துகளின் தரம் அறிந்து எறத்தாழ1800 பேர் எழுதும் எழுத்துகள் மட்டும் உடனடியாகத் திரட்டும்படி தம் திரட்டியை வடிவமைத்துள்ளார்.தகவல்களைத் திரட்டித் தரும் பணியைச் செய்யும் தன் தளத்திற்குத் "திரட்டி" எனத் தமிழ்ப்பெயர் வைத்துள்ளது சிறப்பிற்கு உரிய ஒன்றாகும்.

திரட்டியின் சிறப்பு என்ன?

தமிழ்மணம்,தேன்கூடு உள்ளிட்ட திரட்டிகள்தான் இவருக்கு இந்த எண்ணத்தை ஏற்படுத்தியது.நன்றியுடன் இவற்றை நினைத்துப் பார்க்கும் வெங்கடேசு இத்திரட்டிகளில் அனைத்துப் பதிவுகளும் சில ஆய்வுகளுக்குப் பிறகு திரட்டப்படுகின்றன.படிப்பவருக்குப் பயனில்லா சில செய்திகளை அடிக்கடி சிலர் வெளியிடுகின்றனர்.கவர்ச்சியான தலைப்புகளைத் தந்துவிட்டு தங்கள் தளத்திற்குப் படிப்பவரை இழுத்து ஏமாற்றும் வித்தையைச் சில பதிவர்கள் செய்கின்றனர்.மத உணர்வைத் தூண்டும்படியாகவும்,சாதிய உணர்வுகளைத் தூண்டும்படியாகவும்,பாலியல் உணர்வுடனும் சிலர் பதிவுகளை இடுகின்றனர்.இத்தகு பதிவர்களின் பதிவுகளை எக்காரணம் கொண்டும் தங்கள் திரட்டியில் திரட்ட வெங்கடேசு விரும்பவில்லை.அவர்களின் பதிவகளைத் திரட்ட முடியாதபடி அவற்றைத் தடைசெய்து வைத்துள்ளார்.

திரட்டியில் திரட்டப்படும் பதிவுகள் பற்றிய செய்திகளை முழுமையுடன் காட்ட இவர் தன் மென்பொருளை உருவாக்கியுள்ளார்.ஏறத்தாழ பதினைந்து சொற்கள் திரட்டியில் காட்டப்படுகின்றன.பதிவர்கள் இடும் படங்களையும் திரட்டிக் காட்டுகிறது.தலைப்புகள் தனி வண்ணத்தில் காட்டப்படுவதால் பலரும் ஆர்வமுடன் பதிவுகளைப் படிக்கின்றனர்.திரட்டியில் இடப்படும் இடுகைகளில் இடம்பெறும் குறிச்சொற்களைப் புரிந்துகொண்டு திரட்டி செய்திகளின் அடிப்படையில் பல வகை பகுப்புகளில் செய்திகளைத் தானே வகைப்படுத்துகிறது.அவ்வகையில் செய்திகள்,பங்குவணிகம்,சமையல் குறிப்புகள்,மழலையர்கள் பற்றிய பகுப்புகளில் செய்திகள் உள்ளன.திரட்டியில் தமிழ்ப்பதிவுகளின் தொகுப்பு என்று அறிவிப்பு இருந்தாலும் ஆங்கிலத்தில் முதன்மைச்செய்திகள் காட்டப்படுகின்றன.மேலும் திரட்டி.காம்,ஒலியும் ஒளியும்,திரட்டி அறிவிப்புகள், செய்திகள்,பங்குச்சந்தைச் செய்திகள்,கிரிக்கெட்,சமையல் என்ற அடிப்படையில் மக்கள் கவனம் செலுத்தும் செய்திகளையும் தனித்தன்யாகத்திரட்டும்படி வெங்கடேசு தம் தளத்தை வடிவமைத்துள்ளார்.பின்னூட்டம் வசதி திரட்டியில் இல்லை.

திரட்டி அமைப்பில் பதிவருக்கு முதன்மையில்லை.பதிவுகளுக்கே முதன்மை.பிளாக்கர்,வேர்டுபிரசு வழியாகப் பதிந்தவர்களின் பதிவுகள் திரட்டப்படுகின்றன.பதிவர் பெயர் மற்ற திரட்டிகளில் இருக்கத் திரட்டியில் பதிவர் பெயர் இடம்பெறுவதில்லை.திரட்டியில் எல்லாப் பதிவுகளும் இணைக்கப்படுவதில்லை.படிப்பவருக்குப் பயன்தரத்தக்க பதிவுகள் மட்டும் இணைக்கப்படுகின்றன.மற்ற திரட்டிகளில் "பிங்" செய்தால்தான் நம் பதிவுகள் இணைக்கப்படும்.ஆனால் ஒரு முறை நாம் பதிவு செய்துவிட்டால் திரட்டித் தானே நம் பதிவைத் திரட்டிவிடும்.மற்ற திரட்டிகளில் நாம் எழுதியுள்ளதன் அடிப்படையில் நாம்தான் வகைப்படுத்த வேண்டும்.திரட்டித் தானே வகைப்படுத்திக் கொள்கிறது.மற்ற திரட்டிகளிலிருந்து வேறுபட்ட பல சிறப்புக் கூறுகளைக் கொண்டுள்ள திரட்டியை உருவாக்கிய வெங்கடேசு தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் பல பணிகளைச் செய்ய காத்துள்ளார்.இவர் கூகுள் நிறுவனத்திற்காகக் கணிப்பான் ஒன்றையும்,நம் கணிப்பொறி ஐ.பி எண்ணைக் காட்டும் மென்பொருளையும் இலவசமாக உருவாக்கி வழங்கியுள்ளார்.இவற்றை நாம் இலவசமாக நம் இணையப்பக்கத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.பயன்பெறலாம். கணிப்பொறி வல்லுநர் முகுந்து அவர்களுடன் இணைந்து செல்பேசிக்கு இணையம் வழியாக'ரீசார்ச்' செய்துகொள்ளும் மென்பொருளையும் உருவாக்கியுள்ளார்.வளர்ந்துவரும் இளைஞருக்கு வாழ்த்துரைப்பதன் வழியாக இவர் இன்னும் பல மென்பொருளைக் கண்டுபிடித்துத் தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்ப்பார் என நம்பலாம்.

இக்கட்டுரை மு.இளங்கோவன் அவர்களால் 15-6-2008 அன்று தமிழ்ஓசை இதழில் எழுதப்பட்டது. அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இந்த செய்தியையும் இதழயும் பகிர்ந்துகொண்ட புதுவை இரா. சுகுமாரன் அவர்களுக்கு நன்றி!!!

7 comments

சினிமா நிருபர் said... @ June 15, 2008 10:08 PM

செய்தியை நன்றாக எழுதியிருக்கிறார்கள். திரட்டியின் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

Anonymous said... @ June 19, 2009 11:32 AM

இதற்க்கு முன்னர், அரசியல் என்ற தனி பிரிவு இருந்தது, அந்த அரசியம் என்ற தலைப்பை காணவில்லையே ?

திரட்டி.காம் said... @ June 19, 2009 9:58 PM

அதற்கு பதில் செய்திகள் என ஒரு புதிய பக்கம் உள்ளது பார்க்கவும்.

வெங்கடேஷ்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said... @ August 3, 2009 12:38 AM

கடுமையான உழைப்பிற்கும் புதுமைக்கும் வித்திட்ட நண்பர் வெங்கடேசு நீடூழி வாழ்க.
அவர் பனி மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
கார்த்திகேயன் அமீரகம்
www.geethappriyan.blogspot.com

jerry eshananda. said... @ August 7, 2009 8:37 PM

வெங்கடேஷ் நன்றிகள் பல.உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகிறேன், உங்களுக்கு தோள் கொடுக்கவும் காத்திருக்கிறேன்.
மதுரையிலிருந்து ஜெரி ஈசானந்தா.

gnani said... @ August 28, 2009 10:22 PM

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்....

நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.

எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.

ஊர் கூடி தேர் இழுப்போம்.

எப்படி பணம் அனுப்புவது ?

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. e mail: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

ஜோதிஜி. தேவியர் இல்லம். said... @ October 22, 2009 1:51 AM

மிக அற்புதமான பங்களிப்பு. வாழ் நாள் நிஜமான சாதனையாளர் தான்.

Post a Comment